தமிழகம்

பிரபாகரன் மீண்டும் வருவார்: வைகோ ஆவேசப் பேச்சு

செய்திப்பிரிவு

விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், மக்களைக் காக்க நிச்சயம் வருவார் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.

நெல்லை மாவட்டம் கலிங்கபட்டியில் மதிமுக பொது செயலாளர் வைகோ பேசும்போது, "நான் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் நானும் மதிமுகவும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருப்போம்.

நான் பள்ளிப் பருவத்தில் நடந்த கடமை நாடகத்தில் கதாநாயகனாகவும், வீரமுழக்கம் நாடகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனாகவும், சாம்ராட் அசோகாவில் அசோகராகவும் நடித்தேன். வேணுகோபால் சர்மா என்பவர் ஒன்பது ஆண்டுகளாக திருவள்ளுவரின் ஒவியத்தை வரைந்து, அப்போது முதல்வராக இருந்த பக்தவச்சலத்திடம் அளித்தார். அவரது மகன்தான் ஸ்ரீராம் சர்மா இந்த நாடக்ததை நடத்துகிறார்.

வீரமங்கை வேலுநாச்சியாருக்கும் விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிராபகரனுக்கும் 19 ஓற்றுமைகள் உண்டு. அதில் ஒன்றை மட்டும் கூறுகின்றேன். வேலுநாச்சியார் 8 ஆண்டுகள் மறைந்திருந்து வெள்ளையரை வீழ்த்தி சிவகங்கையை மீட்டார். அதே போல பிரபாகரன் மீண்டும் வந்து ராஜபக்க்ஷே கூட்டத்ததை வீழ்த்தி தமிழீழத்தை மீட்பார். அந்தக் காலம் வெகுவிரைவில் வரும்.

சோனியாவின் ஏவுகணை கொண்டு சிங்களர்கள் தமிழீழத்தை தகர்த்தனர். மக்கள் மன்றத்தில் நியாய கூண்டில் அவர்களால் துன்பப்பட்ட ஈழத்தமிழர்களும், குற்றவாளி கூண்டில் அவர்கள கொன்றெடுத்த சோனியா கூட்டமும் நிற்கும்.

இந்த நாடகம் நான் அரசியலுக்காக போடவில்லை. வீரம் செறிந்த இந்த மண்ணில் வீரத்தாயின் நாடகம் போட வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறியது" என்றார் வைகோ.

SCROLL FOR NEXT