தமிழகம்

காவிரி உரிமை மீட்பு பேரணியில் தீக்குளித்த இளைஞர் பலி: மன்னார்குடியில் இன்று இறுதிச் சடங்கு

செய்திப்பிரிவு

காவிரி உரிமை மீட்பு பேரணியில் தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலம் இன்று மன்னார்குடியில் நடக்கிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்து விட்டுள்ளது. இதற்கு அந்த மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. போராட்டம் என்ற பெயரில் தமிழர்கள் தாக்கப்பட்டனர்.

கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக நடந்த வன்முறைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், கர்நாடகாவில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகில் நேற்று முன்தினம் ஊர்வலம் நடந்தது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். சினிமா இயக்குநர்கள் சேரன், அமீர், சமூக ஆர்வலர்கள், மாணவர் அமைப்பு பிரதிநிதிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அப்போது, ஊர்வலத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி யின் திருவாரூர் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளரான மன் னார்குடியை சேர்ந்த விக்னேஷ் (25) என்ற இளைஞர் கர்நாடகாவுக்கு எதிராக குரல் கொடுத்தவாறு தீக் குளித்தார்.

உடனடியாக சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட விக்னேஷ் நேற்று காலை 10.55 மணிக்கு உயிரிழந்த தாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து தமிழ் ஆர்வலர்கள் அங்கு குவிந்தனர். சீமான், தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

பிரேதப் பரிசோதனைக்கு பின் னர், விக்னேஷ் சடலம் அவரது உறவினர் களிடம் ஒப்படைக்கப்பட் டது. விக்னேஷ் சடலத்தை சொந்த ஊருக்குதான் கொண்டு செல்ல வேண்டும் என போலீஸார் தெரி வித்தனர். ஆனால், சடலத்தை வளசரவாக்கத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு அஞ்சலிக்காக கொண்டு செல்வோம் என நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதம் செய்தனர். இதனால், போலீஸாருக்கும் அவர் களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர், வளசரவாக்கத்துக்கு விக்னேஷின் சடலம் எடுத்துச் செல்லப்பட்டது.

அஞ்சலிக்கு பின்னர், இரவில் விக்னேஷின் சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் சடலம் எடுத்துச் செல்லப்பட்டது.

இறந்த விக்னேஷின் உடல் அவரது வீட்டிலிருந்து மன்னார்குடி ருக்மணிபாளையம் சாலை, காந்தி ரோடு, பந்தலடி, தேரடி வழியாக ஊர்வலமாகக் கொண்டு செல்லப் பட்டு, மூவாநல்லூர் மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

விக்னேஷ் தீக்குளித்தது எப்படி?

நேற்று முன்தினம் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட இளைஞர் விக்னேஷ், அதற்கு 2 தினங்களுக்கு முன்பே முகநூல் பக்கத்தில் “நாம் தமிழர் கட்சி பேரணியில் தற்கொலை போராட் டங்கள் நடைபெறும்” என்று பதிவிட்டு இருந்தார். இதன் மூலம் திட்டமிட்டு அவர் தற்கொலை செய்துள்ளதை போலீஸார் உறுதி செய்துள்ளனர்.

சம்பவத்தன்று பேரணிக்கு வந்த விக்னேஷ் சீமானை சந்தித்து வணக் கம் தெரிவித்துள்ளார். பின்னர், ஊர்வலம் ஆரம்பமான உடன் அரு கில் உள்ள புதுப்பேட்டை பூங்கா வுக்கு சென்றுள்ளார். அங்கு மறை வான இடத்தில் வைத்து தனது பனியனை கழற்றி அதை பெட்ரோ லில் நனைத்து அணிந்துள்ளார்.

அதன் மேல் சட்டையை போட் டுக் கொண்டு பேரணியில் கலந்து கொண்டுள்ளார். பின்னர், சிறிது நேரத்தில் உடலில் தீ வைத்துக் கொண்டார்.

முன்னதாக கோரிக்கை அடங் கிய துண்டுப் பிரசுரங்களை பேர ணியில் விக்னேஷ் வீசி எறிந்ததாக பேரணி பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT