தமிழகம்

அரசனூர் தலித் மக்கள் மீதான பொய் வழக்கை திரும்பப் பெறுக: முத்தரசன்

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம் அரசனூர் கிராம தலித் மக்கள் மீதான பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சிவகங்கை மாவட்டம், அரசனூர் கிராமத்தில் உள்ள தலித் மக்களின் குடியிருப்பில் சாதி ஆதிக்க வெறியர்கள் அத்துமீறி நுழைந்து வன்முறைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் எ என பலர் காயமடைந்துள்ளனர்.

தலித் மக்களின் 8 இருசக்கர வாகனங்களும் ஒரு காரும், ஆட்டோவும் சேதப்படுத்தப் பட்டுள்ளன. ஒரு திருமண வீட்டில் நுழைந்து சமைத்த உணவுகளை எடுத்து தரையில் வீசியுள்ளனர். உறவினர்கள் வழங்கிய மொய் பணத்தை கொள்ளையடித்து, அதன் பாத்திரத்தை நசுக்கி எரிந்துள்ளனர்

இந்தக் கொடூரமான சாதிவெறிச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.இந்த வன்கொடுமைக் குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.

வன்முறைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும். அப்பாவித் தலித் மக்கள் மீதான பொய் வழக்கை திரும்பப்பெற வேண்டும். இயல்பு நிலை திரும்பும் வரை பாதுகாப்பு வழங்க வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT