தமிழகம்

பொதுமக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை

செய்திப்பிரிவு

பொதுமக்களின் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.

போக்குவரத்துத் துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. வருவாய் உள்ளிட்ட துறையின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அதிகாரிகள் மத்தியில் அமைச்சர் பேசியதாவது:

போக்குவரத்துத் துறை பற்றி பொதுமக்களிடம் உயரிய மதிப்பு ஏற்படும் வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். பொதுமக்களின் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதலமைச்சரின் தனிப் பிரிவில் இருந்து பெறப்படும் மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு குறிப்பிட்ட கால வரையறைக்குள் தீர்வு காணப்பட வேண்டும். போக்குவரத்துத்துறை அலுவலகங்களை நாடி வரும் மக்களை அலைக்கழிக்காமல் செயல்பட வேண்டும்.

துறை தொடர்பாக பொதுமக் களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். சாலை விபத்துகள் அதிகமாக நடக்கும் இடங்களைக் கண்டறிந்து அங்கு விபத்து தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு, பதிவுச் சான்று புதுப்பித்தல் சம்பந்தப்பட்ட பணிகளை தாமதம் இல்லாமல் விரைவாக முடிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

போக்குவரத்துத் துறை ஆணையர் சத்தியப் பிரதா சாகு உள்ளிட்டோர் அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற் றனர்.

          
SCROLL FOR NEXT