ராம்குமார் பிரேத பரிசோதனை தொடர்பான வழக்கில் மூன்றாவது நீதிபதியாக என்.கிருபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணை இன்று நடைபெற வுள்ளது.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், கடந்த 18-ம் தேதி உயிரிழந்தார். மின் வயரைக் கடித்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராம்குமாரின் உடல், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப் பட்டுள்ளது. 4 பேர் கொண்ட அரசு மருத்துவர்கள் தலைமையில் பிரேத பரிசோதனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், பிரேத பரி சோதனையில் தங்களது தரப்பில் போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனை தடயவியல் நிபுணர் சம்பத்குமாரையும் சேர்க்க வேண்டும் எனக் கோரி உயர் நீதி மன்றத்தில் ராம்குமாரின் தந்தை மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எஸ்.வைத்தியநாதன் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தது. தனியார் மருத்துவரை அனுமதிக்க அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக 2 நீதிபதிகள் இடையே மாறுபட்ட கருத்தால், இந்த வழக்கு 3-வது நீதிபதியின் உத்தரவுக்காக தள்ளி வைக்கப்பட்டது.
ராம்குமாரின் வழக்கறிஞர்கள் ஆர்.சங்கரசுப்பு, விஜேந்திரன் ஆகியோர் நேற்று காலை தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் முன்பாக இதுபற்றி முறையிட்டனர். அப்போது இந்த வழக்கில் 3-வது நீதிபதியாக என்.கிருபாகரன் நிய மிக்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி தெரிவித்தார். அவர், இந்த வழக்கை இன்று விசாரிப்பார் என தெரிகிறது.
நீதிமன்ற உத்தரவு காரண மாக ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் தொடர்ந்து அரசு மருத்துவ மனையிலேயே பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராம்குமாரின் உடலைப் பார்க்க யாரையும் போலீஸார் அனுமதிக்க வில்லை.