கிராம தபால் நிலைய ஊழியர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றிட வேண்டுமென தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்தியாவில் சுமார் 1 லட்சத்து 52 ஆயிரம் தபால் நிலையங்கள் உள்ளன. இவற்றில் கிராம தபால் நிலைய ஊழியர்களாக சுமார் 2 லட்சத்து 92 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். தமிழகத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் கிராம தபால் நிலைய ஊழியர்களாக வேலை செய்கிறார்கள். குறிப்பாக கிராமப் புற அஞ்சல் நிலையங்களில் பணிபுரியும் 90 சதவீதம் கிராம அஞ்சல் நிலைய ஊழியர்கள் பல ஆண்டுகாலமாக தங்கள் கோரிக்கைகளை தொடர்ந்து மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக பணி நிரந்தரம், நிரந்தர பணியாளர்களுக்கு உள்ள அனைத்து சலுகைகளும் வழங்கப்பட வேண்டும், பணப்பயன், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டுமென போராடி வருகின்றனர். 7-வது ஊதியக் குழுவில் இவர்களது பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பது இவர்களை மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. எனவே மத்திய அரசு கிராம தபால் நிலைய ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.