தமிழகம்

மாயமான ராணுவ விமானம் ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் விமானத்தின் உடைந்த பாகங்களா?-விஞ்ஞானிகள் தொடர் ஆராய்ச்சி

செய்திப்பிரிவு

சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இருந்து அந்தமானுக்கு கடந்த மாதம் 22-ம் தேதி ஏ.என்-32 ரக ராணுவ சரக்கு விமானம் 29 பேருடன் புறப்பட்டு சென்றது.

நடுவானில் பறந்தபோது விமானம் திடீரென மாயமானது. அந்த விமானத்தை தேடும் பணியில் போர்க்கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால் எதிலுமே நம்பகமான தகவல் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து கடலின் மேற்பரப்பில் விமானத்தை தேடும் பணி கடந்த 2-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது.

தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையத்துக்குச் சொந்தமான ‘சாகர்நிதி’, மத்திய புவியியல் ஆராய்ச்சித் துறைக்குச் சொந்தமான ‘சமுத்திர ரத்னாகர்’ ஆகிய இரு ஆராய்ச்சிக் கப்பல்கள், ‘நிருபக்’ என்ற கடற்படை கப்பல், ஒரு நீர்மூழ்கி கப்பல் என 4 கப்பல்கள் மாயமான விமானத்தை ஆழ்கடலில் தேடும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளன. கப்பல்கள் நடத்திய தேடுதலில், 30-க்கும் அதிகமான பொருட்கள் மற்றும் 24-க்கும் அதிகமான சிக்னல்கள் கிடைத்துள்ளன.

கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருட்கள் விமானத்தின் பாகமாக இருக்கலாமோ என்ற சந்தேகம் விஞ்ஞானிகளுக்கு உள்ளது. இது குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வின் முடிவில்தான் இவை மாயமான ராணுவ விமானத்தின் பாகங்களா? என்பது தெரியவரும்.

SCROLL FOR NEXT