தனியார் மென்பொருள் நிறுவன பொறியாளர் உயிரிழப்பு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''சென்னையை அடுத்த செங்கல்பட்டில் உள்ள மகிந்திரா சிட்டியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளையராஜா என்ற மென்பொறியாளர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்மைக்காலமாகவே வடஇந்தியர்களுடன் கலந்து பணியாற்றும் இடங்களிலும், படிக்கும் இடங்களிலும் தமிழர்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முதுநிலை மருத்துவப்படிப்பில் சேர்ந்திருந்த திருப்பூரைச் சேர்ந்த சரவணன் என்ற மருத்துவர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.
அவரைத் தொடர்ந்து இப்போது சென்னை அருகிலேயே இளையராஜா என்ற மென்பொறியாளர் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கிறார். இளையராஜாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்துள்ள நிலையில், அதுகுறித்து நீதி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிடவேண்டும்.
அதுமட்டுமின்றி, இளையராஜாவின் குடும்பத்திற்கு தனியார் நிறுவனமும், தமிழக அரசும் தலா ரூ.25 லட்சம் நிவாரண உதவி வழங்கவேண்டும்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.