சென்னை புறநகரில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 4 பெண்களிடம் இருந்து 19 பவுன் நகை பறிக்கப்பட்டது.
கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுசிலா (30), இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே சாலை ஓரமாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் வந்த இரண்டு பேர் சுசிலாவின் கழுத்தில் இருந்த 1 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர்.
கூடுவாஞ்சேரி விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சுமதி(25), இவர் நேற்று முன்தினம் இரவு கூடுவாஞ்சேரி பாலாஜி பவன் அருகே சாலை ஓரமாக நடந்து செல்லும்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் சுமதியின் கழுத்தில் இருந்த 1 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
கூடுவாஞ்சேரி பத்மா அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி (50), இவர் நேற்று முன்தினம் இரவு கூடுவாஞ்சேரி கன்னியப்பா நகர் பகுதியில் சாலையில் நடந்து செல்லும்போது பின்னால் பைக்கில் வந்த நபர்கள் ஜெயந்தியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 பவுன் பறிப்பு
தாம்பரம் அடுத்த சந்தோஷபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திர அருள். இவரது மனைவி கலைவாணி(38) இவர்களது மகன் தருண் ராஜ். கிழக்கு தாம்பரம் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மதியம் பள்ளிக்கு சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் கலைவாணியின் கழுத் தில் இருந்த 11சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இது தொடர்பாக சேலையூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.