தமிழகம்

நீட் தேர்வுக்கு தாமதமாக விண்ணப்பித்தவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீட் தேர்வுக்கு காலதாமதமாக விண்ணப்பித்த 38 மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முகுந்தன் உள்ளிட்ட 38 மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ''மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு உண்டா? இல்லையா? என்பது தெரியாத நிலையில் கடைசி நாளில் ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்தோம்.

ஆனால் இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக எங்களது விண்ணப்பம் காலதாமதமாக சென்றுள்ளதாகவும், அதனால் எங்களை நீட் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என சிபிஎஸ்இ நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. ஆகவே எங்களையும் தேர்வு எழுத அனுமதிக்கும்படி சிபிஎஸ்சி இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்'' என அதில் கோரியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, ''தொழில்நுட்ப கோளாறு காரணமாக காலதாமதமாக விண்ணப்பித்த இந்த 38 மாணவர்களின் விண்ணப்பத்தை ஏற்று, நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதி வழங்கவில்லை எனில் சிபிஎஸ்இ இயக்குனருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்'' என உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT