வேந்தர் மூவிஸ் மதன் கேரளாவில் பதுங்கி இருக்கலாம் என்று தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேந்தர் மூவிஸ் நிறுவன உரிமையாளர் மதன், ஐந்து பக்கம் கொண்ட ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு கடந்த மே மாதம் 27-ம் தேதி மாயமானார். மதனை கண்டுபிடித்து தரக்கோரி அவரது முதல் மனைவி சிந்து, 2-வது மனைவி சுமலதா, தாயார் தங்கம் ஆகியோர் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் மனு கொடுத்தனர்.
காணாமல்போன மகனை கண்டுபிடித்து தரக்கோரி மதனின் தாயார் தங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து மதனை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மதனை கண்டுபிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில் கேரளாவில் மதன் பதுங்கி இருப்பதாக தகவல்கள் கிடைக்கவே, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு தனிப்படையினர் நேற்று முன்தினம் அங்கு விரைந்தனர். அவர்கள் மாறுவேடத்தில் மதனை தேடிவருகின்றனர்.
மதன் மற்றும் அவரது கூட்டாளிகள் மருத்துவ படிப்புக்கு இடம் வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்து விட்டதாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் புகார் கொடுத்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை விஜயபாண்டி, டாக்டர் பார்கவன், சண்முகம், சீனிவாச பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும் மதனை போலீஸார் தேடி வருகின்றனர்.