தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை அமல்படுத்த, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை அணுகுமாறு மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
விருதுநகர் மாவட்டம், வில்லிபுத்தூரைச் சேர்ந்த வி.விக்னேஷ்ரகுராம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு:
தமிழகத்தில் 2 கோடியே 3 லட்சத்து 87 ஆயிரம் மின் நுகர்வோர்கள் உள்ளனர். இவர்களுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ) சார்பில் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது. பிற மாநிலங்களில் மாதம் ஒரு முறை மின் கட்டண கணக்கீட்டு முறை அமலில் உள்ளது.
இரு மாத முறை மின் கணக்கீட்டு முறையில் கூடுதல் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்த முறையில் மாதம் 300 யூனிட் பயன்படுத்தும் மின் நுகர்வோர் கூடுதலாக ரூ.330 செலுத்த வேண்டும். இதனால் பிற மாநிலத்தில் இருப்பதுபோல் தமிழகத்திலும் ஒரு மாத மின் கணக்கீட்டு முறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் நூட்டி ராமமோகன ராவ், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் வழக்கறிஞர் கே.பி.கிருஷ்ணதாஸ் வாதிட்டார். “மின் கட்டண முறை மாற்றம் குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் முதலில் முறையிட வேண்டும். ஆணையம் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில்தான் நீதிமன்றத்துக்கு வர வேண்டும்” என்று கூறி விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.