இந்தியாவில் உள்ள மாநிலங் களுக்கு எத்தகைய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோ அது போன்ற அதிகாரத்தைத்தான் இலங்கை யிலும் எதிர்பார்க்கிறோம் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறினார்.
சென்னை அடையாறில் உள்ள இந்திய தெற்காசிய ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. ஆய்வு மைய அமைப்பாளர் பேராசிரியர் சூரியநாராயணன், வரவேற்று பேசினார்.
இதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், ‘இலங்கையின் இன்றைய போக்கு’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
இலங்கை அதிபராக ராஜபக்சே பொறுப்பேற்றதும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். இதற்காக 16 பேர் கொண்ட நிபுணர் குழுவையும் அமைத்தார். அந்தக் குழு சாத்தியமான தீர்வு திட்டங்களையும் உருவாக்கியது. ஆனால், அதன்பிறகு ராஜபக்சே இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டவில்லை.
இலங்கையில் வட கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களுக்கு உரிமை அளிக்கும் வகையில் அரசியல் சாசனத்தின் 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டது. ஆனால், இலங்கை அரசாங்கம் அந்தச் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்தவில்லை.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், தங்கள் வசிப்பிடங் களுக்கு மீள்குடியேற்றம் செல்ல முடியவில்லை. யாழ்ப்பாணம் பகுதியில் பள்ளிகளையும் கோயில் களையும் ராணுவத்தினர் இடித்துத் தள்ளுகின்றனர்.
அரசாங்கத்தின் உத்தரவு இல்லாமலா ராணுவத்தினர் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவார்கள்? ராஜபக்சேவின் சகோதரர்தானே இலங்கையின் பாதுகாப்புத்துறை அமைச்சர்.
வளர்ச்சித் திட்டங்களுக்கு என்று சொல்லி தமிழர் பகுதியில் 500 ஏக்கர் நிலம் ராணுவத்துக்கு ஆர்ஜிதம் செய்யப்பட்டு அவர் களுக்கு குடியிருப்புகள் கட்டப் படுகின்றன. தமிழர் பகுதிகள் சிங்களமயமாக் கப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் உதவி
ஒருமித்த நாட்டுக்குள் எந்தவித குந்தகமும் இல்லாமல் விவசாயம், தொழில், வியாபாரத்தோடு நாங்கள் வாழ்ந்தால் போதும். இந்தியாவில் மாநிலங்களுக்கு என்ன அதிகாரங்கள் வழங்கப் பட்டுள்ளதோ அத்தகைய அதிகாரத்தைத்தான் இலங்கையில் நாங்களும் எதிர்பார்க்கிறோம். நாங்கள் தனி ஈழத்தைக் கேட்கவில்லை. இந்த விஷயத்தில் இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு சம்பந்தன் பேசினார்.
முன்னதாக அறிமுகவுரை ஆற் றிய ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கர்னல் ஹரிகரன், “தற்போது இலங்கையில் அனைத்தும் ராணுவமயமாகிவிட்டது. போர்க் குற்றத்துக்காக சர்வதேச விசாரணை நடத்தும் நிலை வந்தாலும் அதற்கு எந்த அளவுக்கு இலங்கை அரசு ஒத்துழைக்கும் என்பது தெரியவில்லை’’ என்றார்.