பெசன்ட் நகர் கடற்கரையில் கேட்பாரற்று கிடந்த ரூ.11 லட்சத்து 89 ஆயிரம் இலங்கை பணத்தை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த துப்புரவு தொழிலாளிக்கு போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பெசன்ட் நகரை சேர்ந்தவர் உமா. மாநகராட்சி துப்புரவு ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் துப்புரவுப் பணியை மேற்கொண்டிருந்தார். அங்கு உள்ள போலீஸ் பூத் அருகே உள்ள குப்பை தொட்டி அருகே கேட்பாரற்ற நிலையில் கைப்பை ஒன்று கிடந்தது. அதை எடுத்து திறந்து பார்த்தபோது அதற்குள் கட்டுக்கட்டாக இலங்கை நாட்டு பணம் ரூ.11 லட்சத்து 89 ஆயிரம் இருந்தது.
அதனை தொழிலாளி உமா சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பணம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து சாஸ்திரி நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பணத்தை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த உமாவை போலீஸ் அதிகாரிகள் நேரில் அழைத்து பாராட்டினர்.