தமிழகம்

ராமமோகன ராவ் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் ஓபிஎஸ் பதிலளிக்க வேண்டும்: ஸ்டாலின்

செய்திப்பிரிவு

'இப்போதும் நான்தான் தலைமைச் செயலாளர்' என்று ராமமோகன ராவ் பேட்டியில் கூறியிருக்கிறார். இதற்கு முதல்வர் ஓபிஎஸ் பதிலளிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களிடம் திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

''ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் சி.ஆர்.பி.எஃப் தலைமை செயலகத்திற்குள் வந்திருக்க முடியாது எனவும், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் முன்னாள் தலைமைச் செயலாளர் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

வருமானவரித் துறை என்பது மத்திய அரசின் கீழ் அமைந்திருந்தாலும் அதற்கென தனி அதிகாரம், தனிச் சட்டம் இருக்கிறது என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஏற்கெனவே பலமுறை மத்திய அரசு அதிகாரிகளின் வீடுகளில், அவர்களது அலுவலகங்களில் எல்லாம் கூட இதுபோன்ற சோதனைகள் நடந்திருக்கின்றது.

அதுமட்டுமல்ல, தகுந்த உரிய ஆதாரங்களின் அடிப்படையில்தான் இந்த சோதனைகள் நடந்திருப்பதாக வருமானவரித் துறை அதிகாரிகளும் கூறுகிறார்கள், மத்தியில் இருக்கும் அமைச்சர் பெருமக்களும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில், ஆதாரம் இருந்த காரணத்தால்தான் தலைமைச் செயலகத்திலும் சோதனை நடந்ததாக செய்திகள் வருகிறது.

அதைவிட முக்கியமாக, இப்போதும் நான் தான் தலைமைச் செயலாளர் என்று ராமமோகன ராவ் பேட்டியில் கூறியிருப்பதாக கேள்விப்பட்டேன்.

நான்தான் தலைமைச் செயலாளர் என்று பேட்டி அளிக்கும் அளவிற்கு முன்னாள் தலைமைச் செயலாளர் இருக்கிறார் என்று சொன்னால், இதற்கு முதல்வர்தான் பதில் சொல்ல வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறினார்.

SCROLL FOR NEXT