தமிழகம்

ஹெல்மட் விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத போலீஸார்: உயர் நீதிமன்றம் கடுமை

செய்திப்பிரிவு

ஹெல்மெட் விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க  சென்னை காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தக் கோரி சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இருசக்கர வாகன விபத்துக்களில் தலையில் காயம்பட்டு இறந்தவர்கள் எத்தனை பேர் , காயமடைந்து சிகிச்சை பெற்றவர்கள் எத்தனை பேர் போன்ற தகவல்களை அறிக்கையாக தாக்கல் செய்ய மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இரு சக்கர வாகனங்களில் பின் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதில்லை எனவும் அவர்களுக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னால் அமர்ந்து செல்பவர்களில் 100 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியவில்லை என்றால் 100 சதவீத வழக்குகள் பதிவாகாதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கடற்கரை சாலையில்  காவல் உதவி ஆய்வாளர்கள் இரண்டு பேர் வேலை செய்யாமல் சாலையின் ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்ப்பதாக கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை பிடிக்க வேண்டாம் என உயர் அதிகாரிகள் காவல் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளனரா?  என கேள்வி எழுப்பினர்..

அதேபோன்று, முதலமைச்சரின் சொந்த தொகுதியான எடப்பாடியில் ஏற்பட்ட விபத்தில் ஹெல்மெட் அணியாத காரணத்தினால் இரண்டு காவலர்கள் உயிரிழந்துள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

மேலும், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும்  ஹெல்மெட் அணிவதை சென்னை மாநகர காவல் ஆணையர் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது  நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஜூலை 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும், ஜூலை 5-ம் தேதி தாக்கல் செய்யப்படும் அறிக்கை திருப்திகரமாக இல்லை என்றால் நீதிமன்றத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

SCROLL FOR NEXT