தமிழகம்

தனியார் பள்ளிகள் அங்கீகார ‘மோசடி’ விவகாரத்தில் 177 புகார்கள்: காவல் துறை

சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி பணம் வசூலித்து, மோசடி செய்துள்ளதாக இதுவரை 177 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, தமிழகம் முழுவதும் தனியார் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து 100 கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாக, தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் அரசகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிராக சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அரசகுமார் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ முத்துக்குமார், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி பணம் வசூலித்து, மோசடி செய்துள்ளதாக இதுவரை 177 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகவும், இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கேட்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT