மதுராந்தகம் அடுத்த காவத்தூர் ஊராட்சி பகுதியில் புது வாழ்வு திட்டத்தின் மூலம் உலக வங்கி கடனுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கறவை மாடு வளர்ப்பு மற்றும் காய்கறி தோட்டத்தை உலக வங்கிக் குழுவினர் நேரில் சென்று செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து, புதுவாழ்வு திட்டத்தின் காஞ்சிபுரம் மாவட்ட திட்ட மேலாளர் தனசேகர் கூறியதாவது: ‘காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் புதுவாழ்வு திட்டத்தின் மூலம் உலக வங்கி கடனுதவியுடன் கறவை மாடு மற்றும் ஆடு வளர்ப்பு மற்றும் காய்கறி தோட்டம் ஆகிய தொழில்களை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், உலக வங்கி கடனுதவியுடன் மேற்கொள்ளப் பட்டு வரும் இந்த தொழில்கள் சிறப்பான முறையில் செயல்படுகின்றனவா என ஆய்வு செய்தவதற்காக, கெவின் க்ராக் போட் என்பவரின் தலைமையில் உலக வங்கிக் குழுவினர், காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட காவாத்தூர் ஊராட்சி கம்சலாபுரம் கிராமப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
தொழிலை மேம்படுத்த தேவைப்படும் கடனுதவி குறித்தும் பயனாளிகளிடம் கேட்டறிந்தனர். புதுவாழ்வு திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்டுள்ள தொழில்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்’ என்றார்.