மத்திய மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் பாதுகாப்பாக, லாபகரமாக நடைபெறுவதற்கு பல்வேறு உதவிகள், சலுகைகளை வழங்கி பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக மீனவர்கள் மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீண்டும் மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் செல்வதால் அவர்களின் தொழிலுக்கு மத்திய மாநில அரசுகள் உதவிட வேண்டும்.
குறிப்பாக மீனவர்கள் 60 நாட்களாக மீன்பிடித் தொழிலுக்கு செல்லாமல் மீன்பிடித் தடைக்காலம் முடிந்த நிலையில் இப்போது மீன்பிடிக்கச் செல்கின்றனர். இந்நிலையில் மீனவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றினால் அவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதாவது புதிய மீன்பிடிப் படகுகளை கடலில் செலுத்துவதற்கு அரசிடம் அங்கீகாரம் பெற முடியாமல் இருப்பது மீனவர்களுக்கு வேதனை அளிக்கிறது. மேலும் படகுகளுக்குப் பதிவு எண் வழங்குவதும் இல்லை என கூறுகின்றனர்.
படகுகளுக்குப் பதிவு எண் கிடைக்காத நிலையில் காப்பீடும் செய்ய முடியாது. இப்படி படகுகளுக்குப் பதிவு எண் கிடைக்காமல், காப்பீடும் செய்ய முடியாமல் இருக்கின்ற வேளையில் மீன்பிடிப் படகுகளை கடலோரக் காவல் படையினர் படகுகளைத் திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனால் படகுகளை இயக்கும் மீனவர்கள், தொழிலாளிகள் எல்லோரும் பாதிக்கப்படுகிறார்கள்.
ஒரு பக்கம் டீசல் விலையேற்றம் என்றால் மறுபக்கம் படகுகளைப் பதிவு செய்ய முடியாத நிலை. இச்சூழலில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். மீன்பிடித் தடைக்காலம் முடிந்தும் மீன்பிடிக்கச் செல்ல முடியவில்லை என்றால் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.
ஆகவே படகுகளுக்குப் பதிவு எண் வழங்கவும், படகுகள் கடலுக்குச் செல்லும் போது பாதுகாப்பு கொடுக்கவும், தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் பாதுகாப்பாக, லாபகரமாக நடைபெறுவதற்கும் பல்வேறு உதவிகள், சலுகைகளை வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மத்திய மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு அவற்றை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்றி மீனவர்களின் வாழ்வாதாரம் சிறக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வாசன் வலியுறுத்தியுள்ளார்.