தமிழகம்

கப்பல் வேலை மோசடி: ரூ.50 லட்சம் சுருட்டிய இளைஞர் கைது

செய்திப்பிரிவு

கப்பலில் வேலை வாங்கித் தருவதாக 17 பேரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்த ஆந்திர மாநில இளைஞர் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்த ராம்நிவாஸ்(26) உட்பட 17 பேர் சென்னை காவல் ஆணையரிடம் கொடுத்த புகார் மனுவில், "சென்னை திரிசூலம் பகுதியில் 'மெர்ச்சன்ட் நேவி கன்சல்டன்சி' என்ற நிறுவனத்தை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுதிர்பாபு, சென்னையை சேர்ந்த பரத்குமார் ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர்.

வெளிநாட்டு கப்பல்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இவர்கள் இருவரும் சேர்ந்து எங்களிடமிருந்து ரூ.50 லட்சம் வரை வாங்கியுள்ளனர். ஆனால் கூறியபடி வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகார் மனுவில் கூறியிருந்தனர்.

புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் செல்வசேகர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் அந்நிறுவனம் பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து நிறுவனத்தின் உரிமையாளர்கள் சுதிர்பாபு, பரத்குமார் இருவரையும் கைது செய்ய முயன்றபோது இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.

தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் சென்னையில் தலைமறைவாக இருந்த சுதிர்பாபுவை நேற்று காலையில் போலீஸார் கைது செய்தனர். பரத்குமாரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

          
SCROLL FOR NEXT