தமிழகம்

உணவை நேரத்துக்கு டெலிவரி செய்வதற்காக அதிகரித்துவரும் போக்குவரத்து விதிமீறல்; 2051 வழக்குகள் பதிவு: நிறுவன அதிகாரிகளுடன் காவல்துறை முக்கிய ஆலோசனை

செய்திப்பிரிவு

போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க, உணவு விநியோகிக்கும் ஸ்விக்கி (Swiggy), ஜொமோட்டோ (Zomato), உபர் ஈட்ஸ் (Uber Eats), டன்ஜோ (Dunzo) நிறுவனங்களின் அதிகாரிகளுடன் சென்னை போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

சென்னை மாநகரில் கைபேசி செயலி வழி உணவு விநியோகிக்கும் நிறுவனங்களில் (App based food delivery services) பணிபுரியும் இருசக்கர வாகன ஓட்டிகள், உணவுப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விரைவாக கொண்டு சேர்ப்பதற்காக, தங்களுக்கும் பிற வாகன ஓட்டிகளுக்கும் விபத்து ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டு வந்ததைத் தொடர்ந்து இவ்வாகன ஓட்டிகள் மீது சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வந்தது.

இந்த நடவடிக்கையில் இதுவரை 2,051 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கைபேசி செயலி வழி உணவு விநியோகிக்கும் நிறுவனங்களின் மேலாளர்களுடன் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையாளர், தலைமையில், சென்னை போக்குவரத்து காவல்துறை‌ அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஸ்விக்கி (Swiggy), ஜொமோட்டோ (Zomato), உபர் ஈட்ஸ் (Uber Eats), டன்ஜொ (Dunzo) ஆகிய நிறுவனங்களின் மேலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிறுவனங்கள் அவர்களது தரப்பிலிருந்து தங்களது ஊழியர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் தக்க அறிவுரைகள் வழங்கப்படும் எனவும், கள ஆய்வு செய்து இவ்வாறான போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் தங்களது ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் செயலி வழி, உணவு விநியோகிக்கும் நிறுவனங்களின் மேலாளர்கள் அடங்கிய வாட்ஸ் அப் குழு, (Whatsapp Group) ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும், அதில் விதிமீறலில் ஈடுபடும் ஊழியர்களின் புகைப்படங்களை காவல்துறை அதிகாரிகள் பதிவு செய்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரம் இந்த வாட்ஸ் அப் குழுவில் பகிரப்படும் எனவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

இந்த நிறுவனங்களின் ஊழியர்கள் போக்குவரத்து விதிகளைக் கடைபிடித்து நடக்கும் வரையில் இந்த நடவடிக்கை தொடரும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT