மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் லேப் டாப் திருடும் நபரை பிடித்தது எப்படி? என தனியார் நிறுவன விற்பனைப் பிரதிநிதி விளக்கமளித்துள்ளார்.
மதுரை பெருங்குடியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(30). இவர் கடந்த ஜூன் 6-ம் தேதி இரவு ஈரோடு செல்லவிருந்தபோது, ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் அவரது லேப் டாப், ஐ-பேடு பேக் திருடுபோனது.
தனது நண்பர்களுடன் இணைத்து செல்போன் தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி பேக்கை திருடிய நபர் டவுன் ஹால் ரோட்டில் தங்கி இருந்த தனியார் விடுதியை ஜெயபிரகாஷ் கண்டறிந்தார்.
போலீஸாரிடம் தெரிவித்தும், அவர்களால் லேப்டாப் திருடிய நபரை பிடிக்க முடியவில்லை. இருப்பினும், ஜெயபிரகாஷ் தனது முயற்சியை கைவிடவில்லை.
ஜூன் 7ம் தேதி ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் நண்பர்களுடன் நோட்டமிட்டு, லேப் டாப் திருடிய நபரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தார்.
இது குறித்து ஜெயபிரகாஷ் கூறியது:
எனது லேப்-டாப், ஐபேடு திருடுபோனது மிகுந்த வேதனை அளித்தது. போலீஸார் விசாரித்தாலும், எனது நண்பர்களுடன் எடுத்த முயற்சியால் பேக்கை திருடிய நபரை பிடித்தோம்.
எனது நண்பர் சுந்தர் உட்பட 5 பேருடன் லேப்-டாப் பேக் ஒன்றுடன் 7-ம்தேதி ஆரப்பாளையம் பேருந்து நிலையம் சென்றோம். சேலம் பேருந்தில் ஏறி, இருக்கைக்கு மேல் லேப்டாப் பேக்கை வைத்துவிட்டு, பேருந்தின் இரு வழியிலும் நின்று கண்காணித்தோம்.
சேலம் பேருந்து புறப்படும் நேரத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர், கட்டைப்பையுடன், கருப்பு லேப்டாப் பேக்குடன் இறங்கி வேகமாகச் சென்றார். அவரைப் பிடித்து விசாரித்தபோது, அவரிடம் ஏற்கெனவே நான் சந்தேகித்த விடுதியின் விசிட்டிங் கார்டு இருந்தது.
பிறகு போலீஸாரிடம் அவரை ஒப்படைத்தபோது, அவர் எனது ஐபேடு, லேப்டாப்பை திருடியது தெரிந்தது.
உசிலம்பட்டி அருகிலுள்ள ஏழுமலை பகுதியைச் சேர்ந்த அவர் கடந்த 28-ம் தேதி முதல் விடுதியில் தங்கியிருந்து கொண்டு மதுரையிலுள்ள பேருந்து நிலையங்களில் லேப்டாப் மற்றும் பல்வேறு பொருட்களை திருடியதும் கண்டறியப்பட்டது.
இவ்வாறு ஜெயப்பிரகாஷ் கூறினார்.