தமிழகம்

கடன் விவகாரத்தை சட்ட ரீதியாக சந்திப்போம்; நேர்மையானவர்களுக்குத்தான் சோதனை வரும்: ஏலம் குறித்து பிரேமலதா விளக்கம்

செய்திப்பிரிவு

கடன் பிரச்சினையைச் சட்ட ரீதியாக சந்திப்போம் என்றும் நேர்மையாக நடப்பவர்களுக்குத்தான் அதிக சோதனை வரும் என்றும் தேமுதிக பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் உள்ள விஜயகாந்தின் ஆண்டாள் பொறியியல் கல்லூரி, சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் 4,651 சதுர அடி நிலம் மற்றும் 10,271 சதுர அடி வணிகக் கட்டிடம் ஆகியவை ஏலத்துக்கு விடப்படுவதாகவும் கடன் பாக்கி, வட்டி, இதர செலவுகளை வசூலிக்க இந்த ஏல நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் இந்தியன் ஓவர்சீஸ்  வங்கி விளக்கம் அளித்தது.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, ''நேர்மையாக நடப்பவர்களுக்கு சோதனை வரும். அதில் இருந்து விரைவில் மீண்டு வருவோம். எப்பாடுபட்டாவது ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை மீட்டெடுப்போம்.

சினிமா உலகம் எப்படி நலிந்துள்ளதோ, அதேபோலத்தான் பொறியியல் கல்லூரிகளும் சிரமத்தைச் சந்திக்கின்றன. நாங்கள் மட்டும் கடன் வாங்கவில்லை. தமிழ்நாடு கடன் பெற்றுள்ளது. ஏன் இந்தியாவே கடன் வாங்கியுள்ளது.

கல்லூரி விரிவாக்கத்துக்காகவே கடன் வாங்கப்பட்டது. இந்த ஏல அறிவிப்பை சட்ட ரீதியாக எதிர்கொண்டு சொத்துகளை மீட்போம். விஜயகாந்த் ஆண்டாள் அழகர் கல்லூரியை ஆரம்பித்தது சேவை மனப்பான்மையில்தான். அதே மனப்பான்மையில்தான் இப்போதும் இருக்கிறோம். கல்விக்கு நாங்கள் செய்யும் சேவை என்றும் தொடரும். இந்த விவகாரத்தில் இருந்து விரைவில் மீண்டு வருவோம்'' என்றார் பிரேமலதா.

SCROLL FOR NEXT