கூடங்குளம் அணுக்கழிவு விவகாரத்தில் திடீர் விஞ்ஞானிகள் மக்களை ஏமாற்றுகின்றனர் என்று முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், "கூடங்குளம் அணுக்கழிவு விவகாரத்தை பொறுத்தவரை மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் அரசு அத்தகைய மையத்தை அமைக்க எந்தக்காலத்திலும் ஒப்புக்கொள்ளாது.
திடீர் விஞ்ஞானிகள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் எல்லாம் அயல்நாட்டு கைக்கூலிகள். மக்கள் இவர்களை நம்ப வேண்டாம்" என்றார்.
அரசின் கடமை...
மேலும் பேசும்போது, "மழைக்காக அனைத்து மதத்தினரும் பிரார்த்தனை செய்கின்றர். நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று பிராத்தனை செய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?
எப்படி ஒரு கிறிஸ்துவ தேவாலயம், மசூதி என பிற மத வழிப்பாட்டுத்தலங்களில் எல்லாம் மழைக்காக வழிபாடு நடக்கிறதோ அதுபோல இந்து ஆலயங்களிலும் வழிபாடு நடக்கிறது.
இந்து சமய ஆலயங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மழை வேண்டி வழிபாடு நடத்த வேண்டியது அரசின் கடமை" என்றார்.
தமிழக சுகாதாரத்துறை பின்னுக்குச் சென்றதற்கு தற்போதைய அரசை மட்டும் குறை சொல்லாமல் திமுகவும் சேர்ந்து இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சுகாதாரத் துறையில் கடந்த ஆண்டு 3-ம் இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9-வது இடத்துக்குச் சென்றது குறித்த கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் கூறினார்.