தமிழகம்

முதல்வர் பழனிசாமியின் ரூ.1 கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட வழக்கு: நிராகரிக்கக் கோரி மேத்யூ சாமுவேல் வழக்கு

செய்திப்பிரிவு

ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரிய வழக்கை நிராகரிக்கக் கோரி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தொடர்ந்த மனுவுக்குப் பதிலளிக்க முதல்வர் பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி ஆவணப்படம் வெளியிட்ட தெஹல்கா முன்னாள் ஆசிரியர்  மேத்யூ சாமுவேல், மனோஜ், சயான் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார்.

தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேச அவர்களுக்கு தடை விதிக்கவும், ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிடக் கோரிக்கை விடுத்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதல்வர் குறித்துப் பேச 7 பேருக்கும் தடை விதித்தும், வழக்கு குறித்துப் பதிலளிக்கவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் முதல்வர் பழனிசாமி தொடர்ந்த மான நஷ்ட ஈடு கோரிய வழக்கை நிராகரிக்கக் கோரி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேத்யூ சாமுவேலின் மனு குறித்து முதல்வர் பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 4-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT