தமிழகம்

நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1177 கன அடியாக அதிகரிப்பு

எஸ்.கோவிந்தராஜ்

அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1177 கன அடியாக அதிகரித்துள்ளது.

சத்தியமங்கலம், ஜூன்.8. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கருர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கிராமங்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது.

இந்நிலையில் தற்போது அணையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவையான தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதியான பரவலாக மழை  பெய்து வருவதால் நேற்றிரவு (வியாழக்கிழமை) முதல் பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

நேற்றுமுன்தினம் காலை அணைக்கு நீர்வரத்து 559 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை அணைக்கு நீர்வரத்து 1177 கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 54.33 அடியாகவும், நீர் இருப்பு 5.5 டிஎம்சியாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் விநாடிக்கு 200 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர வாய்ப்புள்ளதாக பாசனப்பகுதி விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT