தமிழ் மாநில காங்கிரஸின் தலைவர் ஜி.கே.வாசனின் தாயாரும், ஜி.கே.மூப்பனாரின் மனைவியுமான கஸ்தூரி அம்மாள் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.
இதுதொடர்பாக தமாகா இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில், "ஜி.கே.மூப்பனார் மனைவியும், தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் தாயாருமான கஸ்தூரி அம்மாள் (வயது 87) இன்று இயற்கை எய்தினார்.
கஸ்தூரி அம்மாளுக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவால் சென்னை, பூந்தமல்லி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை அவர் காலமானார்.
இன்று மதியம் அவரது உடல் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள சொந்த ஊரான சுந்தரபெருமாள் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மூப்பனார் பங்களாவில் வைத்து நாளை 27.06.2019 வியாழக்கிழமை மதியம் 3 மணி வரை அவருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு நல்லடக்கம் செய்யப்படும்", என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஸ்தூரி அம்மாளின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.