தமிழகம்

திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள்: விஜயகாந்த் பேச்சு

கி.ஜெயப்பிரகாஷ்

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சி களும் ஊழல் செய்த கட்சிகள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவின் மத்திய சென்னை தொகுதி வேட் பாளர் பேராசிரியர் ஜே.கே.ரவீந் திரனுக்கு ஆதரவு தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் யானைக்கவுனியில் ஞாயிற்றுக் கிழமை வாக்கு சேகரித்தார்.

அப்போது, விஜயகாந்த் பேசிய தாவது:

தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது.

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா குஜராத்தை ஒப்பிட்டு பேசுகிறார். ஏற்கெனவே, மதுரவாயல் மேம்பாலம் திட்டம் கிடப்பில் கிடக்கிறது. மதுரவாயல் பாலம் திட்டத்துக்கு, ஏற்கெனவே திமுக கமிஷன் வாங்கிவிட்டதால், அத்திட்டத்தை செயல்படுத்த அதிமுக தயக்கம் காட்டுகிறது. லஞ்சத்திலும், மது விற்பனையிலும், முதல்வரின் ஆணவத்திலும்தான் தமிழகம் குஜராத்தை விட முன்னிலையில் இருக்கிறது.

ஜெயலலிதா மக்கள் விரோதப் போக்குடன் செயல்பட்டுக் கொண் டிருக்கிறார். குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த, குஜராத் போல் நல்ல வளர்ச்சி பெற தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

முதல்வர் ஹெலிகாப்டரில் சென்று பிரச்சாரம் செய்கிறார். அவருக்கு சாலைகளின் மோச மான நிலை தெரியவில்லை. வீடு கட்டித்தர 3 சென்ட் நிலம் தருவதாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தார். ஆனால், இதுவரை தரவில்லை.

6 மாதத்தில் மின்வெட்டை தீர்ப்பதாக கூறினார். ஆனால், மின்வெட்டையும் தீர்க்கவில்லை. சைதை துரைசாமி புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் தொழிலை நடத்தி வருகிறார்.

திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் செய்த கட்சிகள். அதனால், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். ஊழலற்ற ஆட்சி அமைக்கவும், இந்தியாவை வல்லரசாக்கவும் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்.

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

இந்தியில் பேச்சு

யானைக்கவுனி பகுதியில் இந்தி மொழி பேசும் மக்கள் அதிகமாக இருப்பதால், நான் இந்தியில் பேசுகிறேன் என கூறி, அமாரா, துமாரா சின்னம்க்கா லகரா (நமது, உங்களது சின்னம் முரசு நீங்கள் வாக்களிக்க வேண்டும்) என்றார்.

ஆம்புலன்சுக்கு வழி: விஜயகாந்த் யானைக்கவுனியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதைப் பார்த்த விஜயகாந்த் பேச்சை நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸுக்கு வழிவிடுங்கள், வழிவிடுங்கள் என தெரிவித்தார். ஆம்புலன்ஸ் போன பிறகு, மீண்டும் அவர் தன்னுடைய பேச்சை தொடர்ந்தார்.

SCROLL FOR NEXT