தமிழகம்

வைகோ மீதான தேசத் துரோக வழக்கு: ஜூன் 17-க்கு ஒத்திவைத்தது சிறப்பு நீதிமன்றம்

செய்திப்பிரிவு

இந்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ இன்று ஆஜரானார்.

கடந்த 2009-ம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ராணி சீதை மன்றத்தில் 'நான் குற்றம் சாட்டுகிறேன்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் பேசிய வைகோ மீது ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தினர் தேசத் துரோக வழக்கு தொடர்ந்தனர்.

அதுதொடர்பான வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி முன் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் இன்று வைகோ நேரில் ஆஜரானார். அப்போது  அரசுத் தரப்பு சாட்சியான ஆயிரம் விளக்கு காவல் நிலைய ஆய்வாளர் மோகனிடம் வைகோ தரப்பு வழக்கறிஞர் தேவதாஸ் குறுக்கு விசாரணை செய்தார்.

இதனையடுத்து அனைத்து அரசுத் தரப்பு சாட்சியங்களிடமும் விசாரணை முடிந்ததையடுத்து, வழக்கு ஜூன் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் அரசுத் தரப்பு சாட்சியங்களின் குற்றச்சாட்டு குறித்து வைகோவிடம் நீதிபதி கேள்விகளை எழுப்பி விளக்கம் பெறுவார்.

SCROLL FOR NEXT