அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 27-ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அதிமுக-வினர் கடந்த 2 நாட்களாக கடையடைப்பு, மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். பதற்றமான சூழல் நிலவியதால் பேருந்து போக்குவரத்து தடைபட்டது.
நேற்று முன்தினம் குறைவான எண்ணிக்கையில் அரசுப் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டது. கர்நாடக அரசுப் பேருந்துகள் மாநில எல்லை வரை இயக்கப்பட்டன. தனியார் பேருந்துகள் முற்றிலுமாக இயங்கவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இயல்பு நிலை திரும்பியது. இதையடுத்து அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.
கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநில அரசுப் பேருந்துகளும் வழக்கம் போல் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து சென்றன. பேருந்து நிலையப் பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.