பொள்ளாச்சி அடுத்த செமணாம்பதி ,செம்மேடு பகுதிகளில் மான் வேட்டையாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த செமணாம்பதி ,செம்மேடு பகுதிகளில் சிலர் மான் வேட்டையாடியதாக வனத்துறையினருக்குப் புகார் சென்றது. இதையடுத்து பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் காசிலிங்கம் தலைமையிலான வனத்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.
இதில் செம்மேடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (48 ), மாரப்பக் கவுண்டன் புதூரைச் சேர்ந்த தமிழரசன் (38 ), பெரியபோதுவைச் சேர்ந்த சுந்தர்ராஜன் ( 51 ), கேரள மாநிலம் நெடும்பாறையைச் சேர்ந்த பிரகாஷ் (29), மாரப்பக் கவுண்டன் புதூரை சேர்ந்த துரைசாமி (62 )ஆகியோர் வேட்டையாடியதாக வனத்துறையினருக்கு தெரியவந்ததையடுத்து ஞாயிற்றுக்கிழமை பாலகிருஷ்ணன் , சுந்தர்ராஜ் ,பிரகாஷ், துரைசாமி ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர் .
1972 வனப் பாதுகாப்பு சட்டத்தின்படி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர் . இதில் பாலகிருஷ்ணன் என்பவர் வீட்டிலேயே நாட்டு துப்பாக்கி தயாரிப்பது தெரியவந்துள்ளது . அவர்களிடமிருந்து இரண்டு மான்கொம்பு , நாட்டுத் துப்பாக்கி பயன்படுத்தும் தோட்டாக்கள் 76 , இரட்டை குழல் துப்பாக்கி பயன்படுத்தும் தோட்டாக்கள் 24 , 100 கிராம் மருந்து, துப்பாக்கி தயாரிப்பதற்கான உபகரணங்கள் போன்றவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.