தமிழகம்

12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றார் நெல் ஜெயராமன்

செய்திப்பிரிவு

12 ஆம் வகுப்புக்கு இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தில், 'நெல்' ஜெயராமன் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

12 ஆம் வகுப்பு தாவரவியல் பாடப்புத்தகத்தில், விவசாயம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பாரம்பரிய விதைகளை மீட்டெடுப்பது தொடர்பாக இடம்பெற்றுள்ளது. இதில், ஆராய்ச்சியாளர்கள் நாமன் போலக், எம்.எஸ்.சுவாமிநாதன், 'நெல்' ஜெயராமன் ஆகியோர் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

அதில், திருவாரூர் மாவட்டம் ஆதிரங்கம் கிராமத்தைச் சேர்ந்த 'நெல்' ஜெயராமன் 2005 ஆம் ஆண்டு முதல் தன் பண்ணையில் நெல் விதைத் திருவிழா நடத்தியது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2016 ஆம் ஆண்டு ஆதிரங்கத்தில் நடைபெற்ற நெல் விதைத் திருவிழாவில் தமிழகத்தில் உள்ள 7,000 விவசாயிகள் பங்கேற்றது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது, 156 வகயான பாரம்பரிய நெல் விதைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, 'நெல்' ஜெயராமன் 2011 ஆம் ஆண்டு சிறந்த விவசாயிக்கான மாநில விருது பெற்றது, 2015 ஆம் ஆண்டு சிறந்த மரபணு பாதுகாப்பாளர் என்ற தேசிய விருது பெற்றது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 'நெல்' ஜெயராமனின் மனைவி சித்ரா மற்றும் அவரது மகன் ராஜீவ் ஆகியோர் தமிழக முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். 

SCROLL FOR NEXT