தமிழகம்

ஸ்டாலினின் திண்ணை பிரச்சாரம் ஒரு செட்டப் நாடகம்: தமிழிசை விமர்சனம்

செய்திப்பிரிவு

ஸ்டாலினின் திண்ணை பிரச்சாரம் ஒரு செட்டப் நாடகம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை  சவுந்தராஜன் விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற மே தினப் பேரணியில் கலந்து கொண்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அதனைத் தொடர்ந்து ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள மக்கள் வைத்த கோரிக்கைகளைக் கேட்டறிந்தார் ஸ்டாலின்.

ஸ்டாலினின் திண்ணை பிரச்சாரத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார் தமிழிசை. இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

''திண்ணை பிரச்சாரம் என்ற பெயரில் ஸ்டாலின் திண்ணை நாடகம். தன் கட்சியினரை ஏற்கெனவே செட்டப் செய்து முன் தயாரித்த கேள்விகளுக்கு பதில் கூறுவதாக நடிப்பு. ஓட்டப்பிடாரத்தில் அடிப்படை வசதிகளை செய்யத் தவறிய 5 முறை ஆண்ட திமுக ஆட்சி ஏன் செய்யவில்லை? துணை முதல்வராக ஆண்டபோது தூத்துக்குடி கண்ணில் படவில்லையா?

மதுரையில் பிரச்சாரத்தில் டீ குடிக்கச் சென்று எதிரில் அழகிரி பனியனுடன் செல்ஃபி எடுக்கச் செய்த செட்டப் நாடகம். இம்முறை ஓட்டப்பிடாரத்திலும் திண்ணைப் பிரச்சாரமாக அரங்கேற்றம்.

அதிமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூறும் ஸ்டாலின் அவர்களே.. தூத்துக்குடியில் அனுமதியில்லாத துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு தன் சொந்த தம்பியையே சுட்டுக் கொன்றது உங்கள் கழக உடன்பிறப்பு தானே? திமுகவினரால் சொந்தத் தம்பிக்குக் கூட பாதுகாப்பில்லையே? வன்முறை கலாச்சாரம் திமுக தானே''.

இவ்வாறு தமிழிசை தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT