ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் பெற்றுத் தந்த தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
ஆசிய தடகளப் போட்டிகள் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் திங்கட்கிழமை நடந்த 800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்றார். கோமதி 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 70 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.
இதன் மூலம் 2019 ஆம் ஆண்டு ஆசிய தடகளப் போட்டியில் இந்தியா பெற்ற முதல் தங்கம் இதுவாகும்.தங்கப்பதக்கம் வென்ற கோமதிக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தங்கம் வென்ற கோமதி மாரி முத்துவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ''800 மீ ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவுக்கு #GomathiMarimuthu முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!
தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் உலக அரங்கில் பெருமை தேடித் தந்திருக்கும் இவர் மேலும் பல அரிய சாதனைகளை நிகழ்த்திட வாழ்த்துகிறேன்!'' என்று பதிவிட்டுள்ளார்.