சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வேலை பார்க்கும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கச் செல்வதற்காக பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் காத்திருந்தனர். போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், நேற்று காலையில் பயணிகளின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டி விட்டது.
குறிப்பாக, வந்தவாசி, விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை, திருச்சி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நீண்ட நேரமாகக் காத்திருந்ததால் கடும் அதிருப்தி அடைந்தனர். வந்த ஒன்றிரண்டு பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மேற்கூரைகளில் ஏறி அமர்ந்து ஆபத்தான முறையில் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்தனர். மேலும், பலர் காரில் பயணம் மேற்கொண்டதால் தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெருங்களத்தூரில் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் சிலர் கூறுகையில், ‘‘தேர்தலில் வாக்களிக்கக் கூடாது என்பதற்காக திட்டமிட்டு பேருந்து இயக்கத்தைக் குறைத்துள்ளனர்’’ என்றனர்.