தமிழகம்

நேர்முக வரி அதிகரிப்பு, வேலை அடிப்படை உரிமை: மார்க்சிஸ்ட் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

செய்திப்பிரிவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மீனவர்களைப்பாதுகாக்க தனிச் சட்டம், வேலை அடிப்படை உரிமை, நேர்முக வரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

* ஜனநாயகம், கருத்துரிமை, மதச் சார்பின்மை, கூட்டாட்சி, பாலின சமத்துவம், பகுத்தறிவு சார்ந்த அறிவியல் அணுகுமுறை உள்ளிட்ட மாண்புகளுக்கு முக்கியத்துவம்.

* மூட நம்பிக்கைகள் சார்ந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிரான சட்டம் இயற்றுதல்.

* மாநில சுயாட்சியை மையப்படுத்தி, அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்க மத்திய மாநில உறவுகள் சீரமைப்பு, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் மற்றும் நிதி ஆதாரம்.

* கலைக்கப்பட்ட திட்டக்குழு, முடக்கப்பட்ட மாநிலங்களிடை மன்றம், தேசிய வளர்ச்சி கவுன்சில் ஆகிய அமைப்புகளை மீட்டெடுத்தல்.

* வேலை செய்யும் உரிமையை அடிப்படை உரிமையாக்குதல்.

* வேலை கிடைக்கும் வரை வேலையில்லா கால நிவாரணத் தொகை  வழங்குதல்.

* மத்திய, மாநில அரசுகளில் அனைத்துத்துறை அலுவலகங்களிலும் உள்ள காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய வற்புறுத்துவது.

* கார்ப்பரேட்டுகள், பில்லியன் கோடீஸ்வரர்கள் மீது கூடுதல் வரி விதிப்பு (நேர்முக வரி அதிகரிப்பு) என்கிற முறையில் மாற்றம்.

* செல்வ வரியை மீண்டும் கொணர்தல்.

* புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கக் கூடிய வளர்ச்சிப் பாதை, உள்நாட்டு தொழிலைப் பாதுகாத்து, உள்நாட்டு சந்தையை பலப்படுத்தி, மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பது.

* கல்விக்கு ஜிடிபியில் 6 சதவிகிதம் ஒதுக்கீடு, ஆரோக்கியம் (Health) என்பதை அடிப்படை உரிமையாக்கி   5 சதவிகிதம் ஒதுக்கீடு.

* அத்தியாவசிய பொருட்களின் முன்பேர வர்த்தகத்தைத் தடை செய்தல், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்தல்.

* கல்வி, ஆரோக்கியம், குடியிருப்பு போன்ற அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கிடைப்பதற்கு ஏற்பாடு, நீட் தேர்வு முற்றாக ரத்து.

* அனைத்து விவசாயக் கடன்களையும் ரத்து செய்வது, வேளாண் துறைக்குக் கூடுதல் அரசு முதலீடு, நியாய விலை, அரசு கொள்முதல், விவசாய கடன் எளிதில் கிடைத்தல், எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தல்.

* தொழிலாளர் நலச் சட்டங்களை பலப்படுத்துதல், சிறு குறு நடுத்தர தொழில்கள் பாதுகாப்பு, பொதுத்துறையை வலுப்படுத்துதல், பன்னாட்டு நிறுவனங்கள் இந்நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவதை உறுதி செய்தல்.

* இயற்கை வளங்களை அரசின் கட்டுப்பாட்டில் வைத்தல், கார்ப்பரேட்டுகளின் வாராக் கடன் பட்டியலை வெளியிடுதல், கடன்களை வசூலித்தல், தேர்தல் பத்திர முறையை ரத்து செய்தல், ஊழல் தடுப்பு நடவடிக்கைகள், ரஃபேல் போர் விமான ஊழல் பிரச்னையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடுதல்.

* அயல்நாடுகளிலும் அண்டை மாநிலங்களிலும் உள்ள தமிழர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகளின் தலையீடு செய்ய தனி துறை தமிழகத்தில் உருவாக்குதல்.

* ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் பெறக் கூடிய விதத்தில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தத்தை அமலாக்குதல்.

*அரசியல் கட்சிகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் மக்களுக்கு பதில் சொல்லும் பொறுப்பை வலுப்படுத்துதல்.

* ஆளுநர், மத்தியப் புலனாய்வு துறை, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி  உள்ளிட்ட அரசியல் சாசன படி நிறுவப்பட்ட  அமைப்புகளின் சுயேச்சை தன்மையை மீட்டெடுத்தல்.

* அரசியல் சாசனம் சார்ந்த பல்வேறு நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ள மதவெறியாளர்களை அகற்றி தகுதியானவர்களை நியமித்தல்.

* பெண்கள், குழந்தைகள், தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சமூக, பொருளாதார தளங்களில் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டவர்களின் நலனைப் பேணுதல்.

* முதியோர் பாதுகாப்புக்கு மாதம் ரூ.6000 உதவித் தொகை உள்ளிட்ட  சிறப்பு ஏற்பாடு.

* இயற்கை மரணங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கும் காப்பீடு திட்டத்தை நிறைவேற்றுவது.

* நிலங்களை வரைமுறையற்று கையகப்படுத்தும் கொடுமைக்கும், குடியிருப்புகளை விட்டு மக்களை வெளியேற்றும் அவல நிலைக்கும் முற்றுப்புள்ளி வைத்து, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட மக்கள் திரளைப் பாதுகாக்கும் விதத்தில் நிலம் குறித்த கொள்கையும், சுற்றுச்சூழல் கொள்கையும் உருவாக்குதல்.

* சாதி ஒழிப்பு, சமூக ஒடுக்குமுறை ஒழிப்பு போன்ற நடவடிக்கைகளுக்கான புறச்சூழலை ஏற்படுத்துதல், சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவித்தல், இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துதல்.

* கிராமப்புற உழைப்பாளி மக்களின் நலனைப் பாதுகாத்தல், ஊரக வேலை உறுதிச் சட்டத்தை விரிவுபடுத்தி உறுதியாக அமல்படுத்துதல், நிலச்சீர்திருத்தத்தை அமல்படுத்தி நிலமற்ற கிராமப்புற வேளாண் குடும்பங்களுக்கு நில விநியோகம்.

* அனைத்து மக்களுக்கும் அரசு நலத் திட்ட பலன்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் சென்று சேர, நடவடிக்கை, குடிமை சாசனத்தை சட்டபூர்வமாக்குதல்.

* ஆசிரியர் – அரசு ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தைக் கொண்டு வருதல்.

*இ.பி.கோ உள்ளிட்ட சட்டங்களில் திருத்தம் செய்து மரண தண்டனையை ரத்து செய்தல்.

* ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்ய வற்புறுத்துவது.

இவ்வாறு பல்வேறு அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் வகைவாரியாக குறிப்பிடப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT