பாலியல் வழக்கில் பெரியகுளம் அமமுக வேட்பாளர் கதிர்காமுவுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
பெரியகுளம் அமமுக வேட்பாளர் கதிர்காமு. இவர் மீது தேனி அனைத்து மகளிர் போலீஸார் பாலியல் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கதிர்காமு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
மனுவில், "பெரியகுளம் சருத்துப்பட்டியை சேர்ந்த அனிதா என்பவர் கடந்த 2015-ல் அல்லி நகரத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அப்போது அனிதாவுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, என் மீது தேனி அனைத்து மகளிர் போலீஸார் காவல் நிலையத்தில் ஏப்ரல் 8-ல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நான் பெரியகுளம் பேரவைத் தொகுதியில் அமமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறேன். இதனால் என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே இந்த வழக்கில் என்னை போலீஸார் கைது செய்ய வாய்ப்புள்ளது. இதனால் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. கதிர்காமுவுக்கு முன்ஜாமீன் வழங்க அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இதையேற்க மறுத்து கதிர்காமுவுக்கு முன்ஜாமீன் வழங்கிய நீதிபதி, தேர்தல் முடிந்ததும் போலீஸ் விசாரணைக்கு கதிர்காமு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.