தமிழகம்

தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் அலர்ட்; தீவிரவாதிகள் தாக்கலாம் என கர்நாடக போலீஸார் எச்சரிக்கை: தமிழகத்தில் போலீஸ் பாதுகாப்பு

செய்திப்பிரிவு

தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தக்கூடும் என தமக்கு வந்த தகவலை கர்நாடக ஐஜி தமிழக டிஜிபிக்கு எச்சரிக்கை அனுப்பியுள்ளார். இதை அடுத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி தமிழக அரசு அனைத்து மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வாரம் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு இலங்கையில் தேவாலயங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த மக்களை குறிவைத்தும், ஹோட்டல்களிலும் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டதில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் பல இடங்களில் வெடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த குண்டுகள் இலங்கை ராணுவம், மற்றும் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது. இந்தத் தாக்குதலை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு நிகழ்த்தியதாக இலங்கை அறிவித்தது.

இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தொடர் குண்டுவெடிப்பை அடுத்து தமிழகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடக போலீஸாருக்கு நேற்று மாலை ஐந்தரை மணி அளவில் தமிழ்நாடு கர்நாடகா, கேரளா, தெலங்கானா, மஹாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாகவும், ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள்  ஊடுருவியுள்ளதாகவும் லாரி ஓட்டுநர் ஒருவர் தகவல் தெரிவித்ததாக கர்நாடக போலீஸ் தரப்பில் இருந்து தமிழக டிஜிபி க்கு ஒரு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது.

இவர்கள் குறிப்பாக ரயில் நிலையங்களில் தாக்குதல் நடத்தலாம் எனவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்த நிலையில் இதை அலட்சியப்படுத்த வேண்டாம் என்கிற அடிப்படையில் தமிழக அரசும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட எஸ்.பி.களுக்கும், ஆணையர்களுக்கும் கடிதத்தை மேற்கோள் காட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த கேட்டுக்கொண்டது. மேலும் ராமநாதபுரத்தில் ஊடுருவி உள்ளதாக கூறப்படும் 19 தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டு உளவுத்துறையும் போலீஸாரும் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரத்தில் உள்ள பாம்பன் பாலத்தில் நேற்றிரவு முதல் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.தமிழகத்தில் முக்கிய இடங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT