தமிழகம்

குஷ்பு பளார் விட்ட விவகாரம்: காயத்ரி ரகுராம் சந்தேகம்

செய்திப்பிரிவு

தொண்டரை குஷ்பு அடித்த விவகாரம் தொடர்பாக, பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான ரிஷ்வான் ஹர்சத்தை ஆதரித்து குஷ்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

கூட்டத்தைத் தாண்டி குஷ்பு நடந்து கொண்டிருந்த போது, ஒருவர் தகாத முறையில் கை வைத்திருப்பதாகத் தெரிகிறது. உடனடியாக சம்பந்தப்பட்ட நபரைக் கன்னத்தில் அறைந்தார் குஷ்பு. அருகில் இருந்தவர்களும், போலீஸாரும் உடனடியாக அந்த நபரைக் கூட்டத்திலிருந்து அப்புறப்படுத்தினார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவியது.

இது தொடர்பாக பலரும் குஷ்புவைப் பாராட்டினார்கள். இச்சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது, "கர்நாடகாவில் என்னிடம் சில்மிஷம் செய்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் அல்ல" என்று தனது பதிலில் குறிப்பிட்டு இருக்கிறார் குஷ்பு.

இது செய்தியாக வெளியானது. இதனைக் குறிப்பிட்டு பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில், ''தன்னிடம் தவறாக நடந்து கொண்ட ஒருவரை இவர் அறைந்த போது உண்மையிலேயே நான் இவரைப் பாராட்டினேன். ஆனால், இப்போது இந்த வார்த்தைகளைப் பார்த்த பின் அது விளம்பரத்துக்காக செய்ததோ என்று யோசிக்கிறேன். அந்த நபரை இவர் அடித்த போது அவரது முகத்தை இவர் சரியாகக் கூட பார்க்கவில்லை. காங்கிரஸ் தொண்டர்களைத் தவிர மற்றவர்கள் எப்படி இவரை நெருங்க முடியும்?'' என்று காயத்ரி ரகுராம் கேள்வி எழுபபியுள்ளார்.

          
SCROLL FOR NEXT