தமிழகம்

கடைசி வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்: பிப்.23-24 வாக்காளர் பட்டியல் திருத்தம், புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம்

செய்திப்பிரிவு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மற்ற திருத்தங்கள் செய்ய கடைசி வாய்ப்பாக சட்டப்பேரவை தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் இன்றும் நாளையும் நடக்கிறது (பிப். 23 மற்றும் 24).

இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரின் அறிவுரைப்படி வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டு கடந்த 31 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

வாக்காளர்களின் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளனவா? என சரிபார்த்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர். தற்போது வாக்காளர் பட்டியலில் தம்முடைய பெயர்கள் இடம் பெறவில்லை என்று அறிந்தவர்களுக்கு அவர்களுடைய பெயர்களைச் சேர்ப்பதற்கு ஏதுவாக இன்றும் (23.02.2019) நாளையும் (24.02.2019-ஞாயிற்றுக்கிழமை) இரு தினங்களுக்கு அந்தந்த மாவட்டத்திற்குட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இந்த முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். அவ்வமயம் பொதுமக்கள் தத்தம் பெயரைச் சேர்ப்பதற்கு படிவம் 6, பெயரை நீக்குவதற்கு படிவம் 7, திருத்தங்களுக்குப் படிவம் 8, ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றத்திற்கு படிவம் 8 ஏ ஆகியவற்றை அளிக்கலாம்.

மேலும், மாற்றுத்திறனாளிகளைக் கண்டறிவதற்கு ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கும் மேற்படி மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் எவரேனும் வந்தால் அவருடைய வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணை குறிப்பெடுத்துக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி வாக்காளர் எவரேனும் தம் பெயரைப் பதிவு செய்யாமல் இருப்பின் அவருக்குப் படிவம் 6 வழங்கி பூர்த்தி செய்து பெற்றக்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தலில் வாக்களிக்க வசதியாக தேர்தல் ஆணையத்தால் கடைசி வாய்ப்பாக இரண்டு நாள் சிறப்பு முகாம் இயங்குகிறது. இதை வாக்காளர்கள் பயன்படுத்தி தங்கள் பெயர், பட்டியலில் இருப்பதை உறுதி செய்துகொள்ளும்படி தேர்தல் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT