அதிமுக கூட்டணியில் பாமக இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பாமகவுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்ற விவரம் விரைவில் வெளியாகும்.
மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. கடந்த வியாழக்கிழமை சென்னை வந்த மத்திய ரயில்வே துறை அமைச்சரும் பாஜகவின் தமிழகப் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், இரவு 10 மணிமுதல் நள்ளிரவு 1 மணி வரை தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோருடன் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து, இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறி வந்தனர். இதே கருத்தை துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வமும் கூறினார்.
அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கூட்டணி குறித்து இறுதி செய்வதற்காக, சென்னை நந்தனத்தில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் வந்தனர்.
இதையடுத்து, சிறிது நேரத்தில் பாமக தலைவர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் வந்தனர். அவர்களை முதல்வர் சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர், அவர்களுடன் அதிமுகவினர் பேச்சுவார்த்தை நடத்தி, இரு கட்சிகளுக்கிடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியது. பாமகவுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்ற விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திராவிடக் கட்சிகளான அதிமுக, திமுகவை ராமதாஸ் கடுமையாக விமர்சித்து வருகிறார். தமிழகத்தில் பல்வேறு துறைகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஊழல் நடப்பதாக குற்றச்சாட்டுகளை எழுப்பியவர் ராமதாஸ். இந்நிலையில், அதிமுகவுடன் பாமக கூட்டணி சேருவது இறுதி செய்யப்பட்டிருப்பதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகியுள்ளது.