தமிழகம்

திமுக கொறடா சக்ரபாணி எம்.எல்.ஏவிடம் ஓடும் ரயிலில் திருட்டு: மர்ம நபர்கள் துணிகரம்

செய்திப்பிரிவு

திமுக கொறடா சக்ரபாணி ரயிலில் வரும்போது மர்ம நபர்கள் அவரிடமிருந்து ரூ.1 லட்சம் ரொக்கப் பணம், 2 சவரன் தங்க நகை, செல்போன் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனர். இது குறித்து சக்ரபாணி எழும்பூர் ரயில்வே போலீஸில் புகார் அளித்துள்ளார்.

ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை உறுப்பினராகவும்,  திமுக சட்டப்பேரவை கொறடாவாகவும் இருப்பவர் சக்ரபாணி (57). இவர் கட்சி அலுவல் சம்பந்தமாக மதுரைக்குச் சென்றுவிட்டு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை வந்துள்ளார்.

கூபே டைப் தனிப்பெட்டியில் பயணம் செய்த அவர் காலை 4.45-க்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கியுள்ளார். அப்போது அவரது உடமைகளைச் சோதனை செய்தபோது அவரது கையிலிருந்த ரொக்கப் பணம் ரூ. 1 லட்சம், இரண்டு சவரன் மதிப்புள்ள மோதிரம், விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றைக் காணாததால் அதிர்ச்சி அடைந்தார்.

இரவில் உறங்கும்போது அவரிடமிருந்து மேற்கண்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து எழும்பூர் ரயில்வே போலீஸில் சக்ரபாணி எம்.எல்.ஏ புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரைப்பெற்ற போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எம்.எல்.ஏவிடமே ஓடும் ரயிலில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

SCROLL FOR NEXT