தமிழகம்

‘யாருக்கும் ஆதரவு இல்லை’ - ரஜினி அறிவிப்பு: தமிழிசை, திருமாவளவன் பதில்

செய்திப்பிரிவு

நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை. என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ள நிலையில் பல்வேறு கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழிசை சவுந்தரராஜன்

நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி போட்டியிடவில்லை என்ற அறிவிப்பை நேர்மறையான கருத்தாகவே நான் எடுத்துக் கொள்கிறேன். ரஜினியின் அறிவிப்பு பாரதிய ஜனதாவுக்கு எதிரானது கிடையாது. மத்தியில் வலுவான ஆட்சி செய்வது, தண்ணீர் பிரச்சனையை தீர்த்தது யார்? என மக்களுக்கு தெரியும். எனவே நாடாளுமன்ற தேர்தலில் ரஜினியின் நிலைப்பாடு சரியான முடிவுதான்.

திருமாவளவன்

ரஜினியின் அறிவிப்பு நாடாளுமன்ற தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி அறிவித்து இருப்பது அவரது தனித்தன்மையை குறிக்கிறது.

கே.பாலகிருஷ்ணன்

நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி தெரிவித்திருப்பது அரசியல் செயல்பாடாக இல்லை. ரஜினி போன்றவர்கள் நல்லவர்கள் பக்கம் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. மத்தியில் நல்லாட்சி வந்தால்தான் தண்ணீர் பிரச்சனை தீரும். அதற்கு எங்கள் கூட்டணி மூலம்தான் தீர்வு கிடைக்கும்.

நல்லவர்களுக்கு ஆதரவு இல்லை என்றால் எதிரானவர்களுக்கு ஆதரவா? என புரிந்து கொள்ளப்படும். மத்தியில் நல்லாட்சி அமைந்தால்தான் மாநில அரசியலிலும் மாற்றம் கொண்டு வர முடியும்.

கே.பி. முனுசாமி (அதிமுக)

ரஜினி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. சட்டமன்ற தேர்தல்தான் எனது இலக்கு என்று கூறி இருப்பது அவரது முடிவு. ஆனால் அவர் முதலில் மக்களை சந்திக்கட்டும். பிறகு தேர்தலை சந்திக்கலாம்.

இவ்வாறு பல்வேறு கட்சித் தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT