தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கத் தடை: 13 அப்பாவி உயிர்களின் தியாகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி; விஜயகாந்த்

செய்திப்பிரிவு

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது, 13 அப்பாவி உயிர்களின் தியாகத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஆலையைத் திறக்க கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அவ்வழக்கில் இன்று (திங்கள்கிழமை) தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்தும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கத் தடை விதித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில், "ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா நிறுவனம் வலியுறுத்தியதற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்கள் போராட்டத்திற்கும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராடிய 13 அப்பாவி உயிர்களின் தியாகத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. எனவே உச்ச நீதிமன்றம் அப்பகுதி மக்களின் உணர்வுகளை மதித்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருப்பதை தேமுதிக சார்பில் வரவேற்கிறேன்" என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT