லஞ்சம் கேட்டு மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியான விவகாரத்தில் டிஎஸ்பி முத்தழகு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தினர்.
சென்னை தேனாம்பேட்டை காவல் சரகத்தில் ஆள் கடத்தல் விவகாரத்தில் மிகப்பெரிய கும்பல் ஒன்றைப் பிடித்துக் கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்தனர். இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட இளைஞர் ஒருவரும் தேனாம்பேட்டை உதவி ஆணையராக இருந்த முத்தழகும் பேசியதாக மூன்று ஆடியோக்கள் சமூக வலை தளங்களில் பரவின. நெல்லையில் பாஸ்கர சேதுபதி என்பவர் மிரட்டப்பட்டு ரூ.32 கோடி பறிப்பு புகார் மீதான வழக்கில் 4 பேரை தேனாம்பேட்டை போலீஸார் கைதுசெய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். அதில் முக்கிய குற்றவாளி அப்போது சிக்காத நிலையில் இந்த உரையாடல் அமைந்திருக்கும்.
குற்றவாளி சுந்தர் என்பவரின் தம்பி யும் தேனாம்பேட்டை காவல் உதவி ஆணையராக இருந்த முத்தழகும் பேசுவதாக 3 ஆடியோக்கள் வெளியா னது. இதையடுத்து உதவி ஆணையர் முத்தழகு மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். பின்னர் கன்னியாகுமரி மாவட்ட சமூக நல உதவி ஆணையராக மாற்றப்பட்டார். தற்போது ஆவடி பட்டாலியனில் டிஎஸ்பியாக உள்ளார். இந்நிலையில் ஆடியோக்கள் வெளியான அடிப்படை யிலும் பத்திரிகை, தொலைக்காட்சி செய்திகள் அடிப்படையிலும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆடியோக்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
முத்தழகு மீது லஞ்ச ஒழிப்பு போலீ ஸார் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து, அண்ணா நகரில் உள்ள முத்தழகுவின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் நேற்று காலை சோதனை நடத்தினர். வீட்டில் இருந்து சில ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.