தமிழகம்

சாத்தூர் கர்ப்பிணி விவகாரம்; அரசின் அலட்சியமே முழு காரணம்: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சாத்தூர் கர்ப்பிணிப் பெண் விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியமே முழுக்க முழுக்கக் காரணம் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் எச்.ஐ.வி. கிருமி தொற்றுள்ள ரத்தத்தை கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்றிய நிகழ்விற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். தமிழக அரசின் அலட்சியப் போக்கும், மக்கள் நலனில் அக்கறை இல்லாத போக்குமே இந்தக் கொடூரமான மனிதாபிமானமற்ற நிகழ்விற்குக் காரணம்.

தமிழக அரசு தேசிய ரத்த தான கழகத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் செயல்பட வில்லை.

என்னென்ன பரிந்துரைகள்:

# ரத்த வங்கிகளில் ஊழியர்களை நியமிக்கவில்லை.

# நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவில்லை.

#  அவசியப்படும் ரத்தக் கூறுகளை மட்டும் பயன்படுத்தும் நடைமுறையை செயல்படுத்தவில்லை.

# ரத்த வங்கிகளின் தரத்தை மேம்படுத்தவில்லை.

தேசிய அளவில் 2002-ம் ஆண்டே ரத்தக் கொள்கை உருவாக்கப்பட்டும், பாதுகாப்பான ரத்தத்திற்கான செயல் திட்டம் (Action Plan for blood safety) 2007-ல் உருவாக்கப்பட்டும் அவை எதையும் மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தவில்லை.

எச்.ஐ.வி தொற்றை 5 நாட்களுக்குப் பிறகு உடனடியாக கண்டுபிடிக்கக்கூடிய நவீன NAT-ID பரிசோதனை சாதனங்களை தமிழக அரசு வழங்கவில்லை. ரத்த வங்கிகளின் செயல்பாட்டில் பொறுப்பற்ற முறை நீடிப்பதை முடிவுக்கு கொண்டுவரவில்லை.

ரத்த சோகைக்கான சிகிச்சைக்கு சரியான வழிகாட்டு முறைகளை உருவாக்கவில்லை.

ரத்தம் வழங்கும் சிகிச்சை முறைகளில் உலக நல நிறுவனத்தின் பரிந்துரைகளையும், மத்திய மாநில அரசுகள் கடைபிடிக்கவில்லை. அதாவது , ரத்தம் வழங்கும் சிகிச்சையில் (blood transfusion) 90 விழுக்காட்டை ரத்தக் கூறுகளாக (components)  வழங்க வேண்டும், மீதி 10 விழுக்காடு அளவிற்குத்தான் முழு ரத்தம் (whole Blood) வழங்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் பின்பற்றப்படவில்லை.

அதற்கு மாறாக, இந்தியாவிலும் தமிழகத்திலும் 80 விழுக்காடு அளவிற்கு முழு ரத்தமே ஏற்றப்படுகிறது. ரத்தத்தை, ரத்தக் கூறுகளாக ஏற்றும்பொழுது பல்வேறு நோய் தொற்றை குறைக்க முடியும். இந்தப் பரிந்துரையை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தாது கண்டனத்திற்குரியது.

மக்கள் நலனுக்கு எதிரானது

அனைத்து மருத்துவமனைகளிலும் நிலவும் மருந்துகள், தடுப்பு மருந்துகள் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்தம் மற்றும் வெளிக் கொணர்தல் முறையில் ஊழியர்களை நியமிப்பதைக் கைவிட வேண்டும்.

சாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் வழங்கப்பட்டது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவில் குருதி ஏற்று மருத்துவ நிபுணர்களை அதிக அளவில் போடாதது சரியல்ல. விசாரணை என்ற பெயரில் தமிழக அரசு கண் துடைப்பு நாடகத்தை நடத்தக் கூடாது.

எய்ம்ஸ், ஜிப்மர்  உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களை இக்குழுவில் இணைக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 கோடிக்கும் குறைவில்லாமல் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் இலவச மருத்துவம் வழங்க வேண்டும். அவருக்கு பிறக்கவிருக்கும் குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படாதவகையில் கூடுதல் கவனத்துடன் பிரசவம் பார்க்கவும், சிகிச்சைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரத்த தானம் வழங்குவோருக்கு எச்.ஐ.வி கிருமி போன்ற தொற்று இருந்தால், ரத்த தானம் வழங்கியவரைக் கண்டுபிடித்து, நேரில் சென்று அவருக்கு தகவலை சொல்வதுடன், கவுன்சிலிங் மற்றும் சிகிச்சைகளை வழங்க வேண்டும். இதில் தமிழக அரசு தவறிழைத்து வருகிறது.

இந்த நடைமுறை கடைபிடிக்கப் பட்டிருந்தால், சாத்தூர் சம்பவம் நிகழ்ந்திருக்காது. தமிழக அரசின் அலட்சியப் போக்கே இதற்குக் காரணம். அவசியமின்றி ரத்தம் ஏற்றப்படுவதை தடுக்க வேண்டும்.

இந்தியாவிலும், தமிழகத்திலும் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2016-க்குப் பிறகு அதிகரிப்பது கவலை அளிக்கிறது. எச்.ஐ.வி/எய்ட்ஸ் தடுப்பிற்கான நிதியை மத்திய அரசு குறைத்ததே இதற்குக் காரணம்.

எனவே, எச்.ஐ.வி தடுப்புக்கான நிதியையும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கான நிதி உதவியையும் மத்திய அரசு அதிகரிக்க வேண்டும்.தமிழக அரசும் பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

எச்.ஐ.வி/எய்ட்ஸ் தடுப்பை தனியாரிடமும், தொண்டு நிறுவனங்களிடமும் விடாமல், மத்திய - மாநில அரசுகளே நேரடியாக மேற்கொள்ள வேண்டும்.செயற்கை ரத்தம் குறித்த ஆராய்சிகளை ஊக்கப்படுத்த வேண்டும்''.

இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT