மோட்டார் வாகன விபத்தில் மரணமடைந்தவருக்கு நேரடி வாரிசுகள் இல்லாத பட்சத்தில் உடன்பிறந்தவர்களுக்கு இழப்பீட்டை வழங்கலாம் என உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள் காட்டி சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
கல்குவாரி தொழிலாளியான வேலூரைச் சேர்ந்த கணபதி, கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் லாரி விபத்தில் சிக்கி பலியானார். சகோதரன் மரணத்துக்கு இழப்பீடாக 25 லட்சம் ரூபாய் வழங்க கணபதியின் சகோதரி மல்லிகா தொடர்ந்த வழக்கை, வேலூர் விபத்து வழக்குகளுக்கான தீர்ப்பாயம் 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து மல்லிகா தாக்கல் செய்த மேல்முறையீட்டை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரன் விசாரித்தார். கணபதியின் வாரிசு என்பதற்கான எந்த ஆதாரத்தையும் தீர்ப்பாயத்தில் மல்லிகா தாக்கல் செய்யவில்லை என்பதால் இழப்பீடு கோர முடியாது என இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
திருமணமாகாத கணபதிக்கு நேரடி வாரிசு இல்லாத நிலையில், மல்லிகாவை வாரிசு என தாசில்தார் மறுத்துவிட்டதால், மல்லிகாவிற்கு இழப்பீடு கோர உரிமையில்லை என கூறமுடியாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முரளிதரன், குஜராத்தைச் சேர்ந்த ராமன்பாய், பிரபாத்பாய் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டி தீர்ப்பை அளித்தார்.
அவரது தீர்ப்பில், ஒரே குடும்பத்தில் அண்ணன், தங்கை, குழந்தைகள் ஒன்றாக வசிக்கும்போது குடும்பத்தைக் காப்பாற்றியவர் விபத்தில் பலியானால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இழப்பீடு தர மறுக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டி கணபதிக்கு வாரிசாக மல்லிகா தான் கருத வேண்டுமென்று தெளிவுபடுத்தியதுடன், வேலூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும் விபத்தில் பலியான கணபதிக்கான இழப்பீட்டு தொகை 2 லட்ச ரூபாயை வழக்கு தொடர்ந்த தேதியிலிருந்து 7.5 சதவிகித வட்டியுடன் 8 வாரத்தில் சகோதரி மல்லிகாவிடம் வழங்க வேண்டுமென யுனைட்டட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.