அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மிதமான மழை தொடரும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நுங்கம்பாக்கத்தில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், "காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வரும் 24 மணிநேரத்தில், கடலோரத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழைக்கும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது.
கனமழையைப் பொறுத்தவரையில் கடலோரத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் எதிர்பார்க்கலாம். சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மிதமான மழை தொடரும். ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மீனவர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது" என புவியரசன் தெரிவித்தார்.