மாணவர்களுக்கு தரமற்ற மிதிவண்டிகள்ளை தமிழக அரசு வழங்கியுள்ளதாக அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘ஜெயலலிதா தாயுள்ளத்தோடு மாணவர்களின் நலன் காக்க இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி திட்டத்தை கொண்டுவந்து அதை மிகுந்த கவனோத்தோடு நடைமுறைப் படுத்தினார்கள்.
இதனைப் பின்பற்றி கர்நாடகாவிலும் விலையில்லா மிதிவண்டியை மாணவர்களுக்கு வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. சமீபத்தில் கர்நாடக அரசின் சார்பில் அப்படி வழங்கப்பட்ட மிதிவண்டிகள் தரமற்றவையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததால் அந்த மிதிவண்டிகளை அம்மாநில அரசு நிராகரித்துள்ளது.
நிராகரிக்கப்பட்ட அந்த மிதிவண்டிகளை விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தழுதாளி கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், அமைச்சர் சி.வி.சண்முகம் அப்பகுதியைச் சேர்ந்த ஒன்பது அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கியதாக ஊடகங்களிலும், பத்திரிக்கைகளிலும் செய்தி வெளிவந்துள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
ஜெயலலிதா மாணவர்களின் நலனுக்காக முன்னெடுத்த உன்னத திட்டத்தை, பழனிசாமி அரசு மிகவும் அலட்சியத்தோடு நடைமுறைப்படுத்தும் முறையால், பயன்பெறும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது.
இது குறித்த விரிவான விசாரணையை இந்த அரசு உடனடியாக மேற்கொண்டு, இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, மாணவர்களின் நலனில் விளையாட வேண்டாம் என்றும் இந்த அரசை எச்சரிக்கிறேன்’’ என அவர் கூறியுள்ளார்.