தமிழகம்

மயிலை மயில் சிலை விவகாரம்; பொன்மாணிக்கவேல் கோரிக்கை: நிராகரித்தது உயர் நீதிமன்றம்

செய்திப்பிரிவு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான புகார் குறித்து  இந்து சமய அறநிலையத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் வைத்த கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள்,  நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு  அடங்கிய அமர்வில் தொடர்ந்து நடந்து வருகிறது, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மயில் சிலை மாற்றப்பட்டது குறித்து நேற்று நடந்த விசாரணையில் பதிலளித்த  அறநிலையத்துறை  இது குறித்து மூவர் விசாரணை குழு அமைக்கப்பட்டதாக தெரிவித்தது. இதை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மணிக்கவேல் ஆஜராகி , மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மயில் சிலை மாற்றப்பட்டது குறித்து அறநிலையத்துறை  விசாரணை குழுவால் தங்கள் விசாரணைக்கு இடையூறு ஏற்படுவதால், இந்து சமய அறநிலைத்துறை குழு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதற்கு அறநிலையத்துறை சார்பில் அளிக்கப்பட்ட பதிலில் துறைக்குள் நடத்தப்படும் விசாரணையால் மற்ற விசாரணை அமைப்பின் விசாரணை எந்த வகையிலும் தடையாக இருக்காது என தெரிவித்தனர்.

இதையடுத்து, துறை ரீதியான விசாரணையும், குற்ற வழக்கு விசாரணையும் ஒரே நேரத்தில் நடைபெறலாம் எனத்  தெரிவித்த நீதிபதிகள், பொன்மாணிக்கவேலின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர்.

சிலைகள் பாதுகாப்பு மையங்கள் அமைப்பது தொடர்பான வழக்கில், மையங்களில் உள்ள சிலைகளுக்கு உரிய முறையில் பூஜைகள் செய்யப்பட்டு வருவதாக அறநிலையத் துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், குறிப்பிட்ட ஒரு சிலை பாதுகாப்பு மையத்தில் 42 சிலைகள் போலியானவை எனவும், அச்சிலைகளை  ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரினார்.

அதற்கு நீதிபதிகள், தமிழகத்தில் தற்போது உள்ள 19 சிலை பாதுகாப்பு மையங்களிலும் உள்ள அனைத்து சிலைகளையும் தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் எனவும், படிப்படியாக இந்த சிலைகள் ஆய்வு செய்ய முடியும் என தெரிவித்த நீதிபதிகள்,  விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT